பேஸ்புக் காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்: மீண்டும் நாடு திரும்புவது ஏன்?
பேஸ்புக் மூலம் காதல் கொண்ட நபரை பாகிஸ்தான் சென்று திருமணம் செய்த இந்திய பெண் மீண்டும் இந்தியா வரவுள்ளதாக, அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மூலம் காதல்
உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் அஞ்சுவும், பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். நஸ்ருல்லா மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் அப்பர் திர் மாவட்டத்தில் உள்ள தனது பாகிஸ்தான் நண்பரான நஸ்ருல்லாவைச் சந்திக்க அஞ்சு சென்ற போது, அவரை பாகிஸ்தான் பொலிசார் விசாரணை செய்தனர்.
அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததால் அஞ்சு விடுவிக்கப்பட்டார். மேலும், நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே, நஸ்ருல்லா வீட்டுக்கு சென்ற அஞ்சு, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்திருந்தார். அதே நேரத்தில், தனது தோழியாகிய அஞ்சுவை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என நஸ்ருல்லா கூறிய ஒரே நாளில் அனைத்தும் மாறின.
பாகிஸ்தானில் காதலனை கரம் பிடித்த அஞ்சு
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சட்டப்பூர்வமாகச் சென்ற அஞ்சு , இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பாகிஸ்தானிய காதலரான நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார். இப்போது தனது பெயரான அஞ்சுவை பாத்திமா என்று மாற்றியிருக்கிறார்.
திர் பாலாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நஸ்ருல்லாவின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இந்தியா திரும்புவது ஏன்?
இந்நிலையில், அஞ்சு என்ற பாத்திமா இந்தியா திரும்பவுள்ளதாக அவரது கணவர் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்திடம் இருந்து NOC சான்றிதழுக்காக ஏற்கனவே விண்ணப்பத்திற்கும் நிலையில், அதற்காக காத்திருப்பதாக கூறினார்.
வாகா எல்லையில் ஆவணங்கள் முடிந்தவுடன் அஞ்சு இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார். அவர், தனது குழந்தைகளை இந்தியாவிற்கு சென்று பார்த்துவிட்டு பாகிஸ்தான் திரும்புவார்.
இனி பாகிஸ்தான் தான் அவருடைய வீடு என்பதால் நிச்சயம் பாகிஸ்தான் திரும்புவார் என அஞ்சுவின் கணவர் நஸ்ருல்லா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |