மாஸ்க் அணிய சொன்னதற்காக ஆசிய நாட்டவர் மீது இனரீதியாக தாக்குதல் நடத்திய இளம்பெண்கள்: ஒரு திடுக் வீடியோ
தனது காரில் பயணித்த இளம்பெண்களை மாஸ்க் அணியச் சொன்னதற்காக, சாரதி ஒருவர் மீது இனரீதியாக இளம்பெண்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த சுபாகர் கட்கா (32) என்பவர், சான் பிரான்சிஸ்கோவில் உபேர் சாரதியாக பணி செய்துவருகிறார்.
கடந்த ஞாயிறன்று மூன்று இளம்பெண்களை தன் காரில் ஏற்றிக்கொண்ட சுபாகர், அவர்களில் ஒரு பெண் மாஸ்க் அணியாததால் அவரை மாஸ்க் அணியச் சொல்லியிருக்கிறார்.
அத்துடன், அவரிடம் மாஸ்க் இல்லையென்றால், வாங்கிக்கொள்வதற்கு வசதியாக பெட்ரோல் நிலையம் ஒன்றில் காரை நிறுத்தியிருக்கிறார் சுபாகர்.
ஆனால், அந்த பெண்களோ சுபாகரை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு, அவரிடம் மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.
சுபாகரின் காரில் இருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில், ஒரு பெண் சுபாகரின் முகத்துக்கு அருகே வந்து வேண்டுமென்றே இருமுவதையும், கத்திக்கொண்டே அவரது மொபைலை பிடுங்குவதையும், அவரது மாஸ்கை பிய்த்து எறிவதையும் காணலாம்.
அத்துடன், மற்றொரு பெண் கண் எரிச்சலை உண்டாக்கும் பெப்பர் ஸ்பிரேயை காருக்குள் அடித்திருக்கிறார்.
தான் பிழைப்புக்காக நேபாளத்திலிருந்து அமெரிக்கா வந்ததாக கூறும் சுபாகர், நீங்கள் அமெரிக்காவில் பிறந்ததால் உயர்ந்தவர்கள் அல்ல, சக மனிதர்களை இதுபோல் நடத்தும் நீங்கள் மனிதர்களே அல்ல, மிருகங்கள் என்கிறார்.
தன் மீதான தாக்குதல் இன ரீதியானது என கருதுகிறார் சுபாகர். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

