இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு இறுதிச்சடங்கு
2023-ல் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான கூட்டு இறுதிச் சடங்கு காஸாவில் நடைபெற்றது.
2023-ஆம் வருடத்தில் காஸா போரின்போது இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமானத் தாக்குதல்களில் ஒன்றில் கொல்லப்பட்ட 40 சிறார்கள் உட்பட 112 பேரின் கூட்டு இறுதிச் சடங்கிற்காக, செவ்வாய்க்கிழமையன்று மத்திய காஸாவில் மக்கள் திரண்டனர்.
நூற்றுக்கணக்கான மக்கள்
அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேலின் தாக்குதல்களின் உக்கிரம் குறைந்திருந்தாலும் முழுமையாக நின்றுவிடாத நிலையில், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை அவர்களின் உடல்களை மீட்க முடியவில்லை.

டெய்ர் அல்-பலாவில், தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த, பாலஸ்தீனக் கொடிகளால் போர்த்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகளைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.
அருகிலுள்ள கல்லறையில் அடக்கம் செய்வதற்காக, இடிபாடுகள் நிறைந்த தெருக்கள் மற்றும் சிதைந்த கட்டிடங்களுக்கு இடையே சடலங்களை எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, துயருற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
2023-ஆம் ஆண்டு நவம்பர் 22-அன்று காஸா நகரில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஒரு குடியிருப்புத் தொகுதியைத் தகர்த்தபோது கொல்லப்பட்ட 300-க்கும் மேற்பட்டோரில் இவர்களும் அடங்குவர்.
குண்டுவீச்சில் சிதைந்திருந்த இடிபாடுகளைத் தங்கள் வெறும் கைகள் மற்றும் எளிய கருவிகளைக் கொண்டு தோண்டிய அங்கிருந்தவர்களால், சுமார் 40 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
கடந்த வார இறுதியில், காஸாவின் சிவில் பாதுகாப்புப் படையினர் தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிட இடிபாடுகளைத் தோண்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மேலும் 112 பேர்களின் உடல்களை மீட்டனர்.

இனப்படுகொலை
இன்னும் 157 பேர் காணாமல் போயுள்ளதாகவே அங்குள்ள எஞ்சிய மக்கள் தெரிவிக்கின்றனர். காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சை நிறுத்தாத போதிலும், அக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம்,
அப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் புதையுண்டு கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.
குறைந்தது 7,400 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் புதையுண்டு கிடப்பதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல ஆயிரங்கள் அதிகமாக இருக்கக்கூடும்; சில தாக்குதல்களில் முழு குடும்பங்களுமே கொல்லப்பட்டதால், அவர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க உறவினர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐ.நா ஆணையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை கண்டறிந்துள்ளன.
அக்டோபர் மாத போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வார இறுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 7, 2023 முதல் காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் 73,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட 1,250-க்கும் மேற்பட்டோரும் அடங்குவர்.
காஸா முனைப் பகுதியின் பெரும்பகுதி இஸ்ரேல் குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது; அங்குள்ள 20 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்து, சுகாதாரமற்ற, நெரிசல் மிகுந்த கூடார முகாம்களில் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |