காஸா மருத்துவமனைகளில் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள்... அதிர்ச்சியில் உலகம்
இஸ்ரேலிய தாக்குதல்களை அடுத்து காஸாவின் இரு பிரதான மருத்துவமனை வளாகத்தில் கொத்துக் கொத்தாக புதைக்கப்பட்டுள்ள பல நூறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுயாதீன விசாரணை
ஐ.நாவின் மனித உரிமைகள் தலைவர் தெரிவிக்கையில். காஸா பகுதியில் அமைந்துள்ள நாசர் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகள் அழிக்கப்பட்ட விவகாரம் தம்மை உலுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நாசர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மட்டும் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எப்படி இறந்தார்கள், எப்போது புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பான உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கையில், பிப்ரவரியில் கான் யூனிஸ் நகரப்பகுதியில் முன்னெடுத்த தாக்குதலின் போது பாலஸ்தீனியர்களால் புதைக்கப்பட்ட உடல்களை துருப்புக்கள் பரிசோதனை செய்ததாகவும், தொடர்புடைய பகுதியில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் தங்கியிருந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் 10 பேர்கள் தற்போது தெரிவிக்கையில், அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் நீண்ட காலம் நாசர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
வயதானவர்கள், பெண்கள்
இதனிடையே, நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய நடவடிக்கைக்கு முன்னர், மருத்துவமனை வளாகத்தில் உடல்களை அடக்கம் செய்ய வற்புறுத்தப்படுவதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப பகுதியில் சண்டை வலுப்பெற்றுள்ளதால் கல்லறைக்கு சடலங்களை கொண்டு செல்வது ஆபத்தான விடயம் என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது நாசர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து 283 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் ஆழமான பள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், கழிவுகளால் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பலர் வயதானவர்கள், பெண்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் கைகள் கட்டப்பட்டு, ஆடைகளை களைந்த நிலையில் சடலமாக காணப்பட்டனர். இதே வேளை, ஏப்ரல் 9ம் திகதி அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து 381 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே கான் யூனிஸ் நகரப்பகுதியில் முன்னெடுத்த இரண்டு வாரத் தாக்குதலின் போது மருத்துவமனையில் ஒளிந்திருந்த 200 பயங்கரவாதிகளை கொன்றுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |