சிறை வேண்டாம்... 77 கொலை செய்த கொடூர குற்றவாளி அரசுக்கு எதிராக மீண்டும் வழக்கு
தனிமைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் மீண்டும் நோர்வே அரசாங்கத்தின் மீது வழக்கு
சமூகத்திற்கு அச்சுறுத்தலான நபராகவே கருதப்படுவதால், அவர் சிறையில் இருப்பதே தகுந்த நடவடிக்கை
77 பேரைக் கொன்ற நோர்வே தீவிர வலதுசாரி தீவிரவாதி ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக், தனது தனிமைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் மீண்டும் நோர்வே அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
குறித்த தகவலை நோர்வே ஊடகங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளன. 2012ல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவித்த பின்னர் ப்ரீவிக் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
@AP
தற்போது தனிமைச்சிறையில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை அவரது சட்டத்தரணி நீதித்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ப்ரீவிக் ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு என அடிக்கடி மாற்றப்பட்டார்.
ஆனால் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை தவிர வேறு எவரையும் அவர் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஜனவரியில் டெலிமார்க் மாவட்ட நீதிமன்றத்தில் பரோல் விடுவிப்புக்கான விசாரணையில் 43 வயதான ப்ரீவிக் ஆஜரானார்.
ஆனால் இன்னமும் அவர் சமூகத்திற்கு அச்சுறுத்தலான நபராகவே கருதப்படுவதாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவர் சிறையில் இருப்பதே தகுந்த நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
2011ல் ஒஸ்லோவின் அரசாங்க மாவட்டத்தில் வெடிகுண்டு வைத்ததற்காகவும், இடதுசாரி இளைஞர் ஆர்வலர்களுக்கான கோடைக்கால முகாமில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காகவும் ப்ரீவிக் நோர்வேயின் அதிகபட்சமாக 21 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஆனால் 21 ஆண்டுகளுக்கும் மேலாக ப்ரீவிக் காவலில் வைக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. இது சமூகத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை குற்றவாளிகளை சிறையில் வைத்திருக்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.
@AP
தமக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ப்ரீவிக் மேல்முறையீடு செய்யாத நிலையில், 2016ல் மனித உரிமைகள் மீறல் என கூறி அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
மட்டுமின்றி, தமக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் அவர் புகார் அளித்திருந்தார். மேலும், தமது ஆதரவாளர்களை சந்திக்கும் பொருட்டு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.