திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது.

இதில், கடையநல்லூர் மற்றும் சீர்காழியில் மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில், மதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றதால் நேரடி ஆதரவை வழங்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில், மதிமுகவின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, தற்போது கூட்டணியை முறித்து வெளியேறியுள்ளது.
எம்.எல்.ஏ எதிர்ப்பு
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன் வைகோவின் முடிவு தவறானது என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "26.06.2026 தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் பேசியது என்ன? அன்புத் தலைவர் வைகோ அவர்களே உங்களை உண்மையாக நேசிக்கிறேன்...
கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச்செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ அவர்கள் மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம்..
தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள்.
எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்துஇருப்போம். தவிர, கூட்டணி குறித்து தாங்களும்,கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன்.
மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் நேற்று (26.06.2026) பிற்பகல் 2 மணிக்கு தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன்.
அதன் பின்னர் இரவு தலைவர் வைகோ அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன்.
42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது.
அதேபோல் "வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது.
எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.. தலைவர் அவர்களே!எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |