இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு ஹரியின் மனைவி மேகன் வரமாட்டார்: காரணம் இதுதானாம்
பிரித்தானிய மகாராணியாரின் கணவரும் இளவரசர் ஹரியின் தாத்தாவுமான இளவரசர் பிலிப் நேற்று இயற்கை எய்திய நிலையில், அவரது இறுதிச்சடங்கு குறித்து திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தனது தாத்தாவின் மரணம் குறித்து அறிந்த இளவரசர் ஹரி, இளவரசர் சார்லஸ், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜினி உட்பட குடும்ப உறுப்பினர்கள் சிலரைத் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவர், தான் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க விரும்புவதாகவும், அதற்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மகாராணியாரும், தனது கணவரை கௌரவிக்கும் வகையில், தனது பேரப்பிள்ளைகள் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் கூட இணைந்து அவரது இறுதிச்சடங்கில் ஒற்றுமையாக நிற்கவேண்டும் என்றே எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
அதேபோல், சில ராஜ குடும்ப உறுப்பினர்களும், வில்லியமும் ஹரியும் ஒரு ஆண்டுக்குப் பின் தங்கள் தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக முதன்முறையாக சந்திக்க இருக்கும் நிலையில், இது அவர்கள் சமாதானம் செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறார்கள்.
இதற்கிடையில், ஹரியின் மனைவி மேகன், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளமாட்டார் என தெரியவந்துள்ளது.
மேகன் கர்ப்பமாக இருப்பதால், அவர் பிரித்தானியா வரப்போவதில்லை என்றும், அவர் அமெரிக்காவிலேயே இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஹரி மேகனின் இணையதளமான Archwell தளத்தில், இரண்டு வரியில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் சேவைகளுக்காக நன்றி... உங்களை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுவோம் என்று கூறுகிறது அந்த செய்தி!