முதன்முறையாக இளவரசி என அழைக்கப்பட்ட ஹரி மேகன் தம்பதியரின் மகள்: ராஜ குடும்ப இணையதளத்தில் செய்யப்படும் முக்கிய மாற்றம்
ராஜ குடும்பத்தைப் பிரிந்தாலும், ராஜ குடும்பத்தின் பெயரைச் சொல்லியே பணமும் கௌரவமும் தேடும் இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு மேலும் மகிழ்ச்சியான ஒரு செய்தி கிடைத்துள்ளது.
முதன்முறையாக இளவரசி என அழைக்கப்பட்ட லிலிபெட்
இம்மாதம் 3ஆம் திகதி ஹரி மேகன் தம்பதியரின் இளைய மகளான லிலிபெட்டுக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான செய்தியை வெளியிட்ட ஹரி மேகன் தம்பதியரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், இளவரசி லிலிபெட் டயானாவுக்கு மார்ச் 3ஆம் திகதி திருமுழுக்கு கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், முதன்முறையாக லிலிபெட் இளவரசி என குறிப்பிடப்பட்டுள்ளதுதான்.
மன்னரும் ஹரியும் ஒப்புதல்
மன்னர் சார்லசும், இளவரசர் ஹரியும் ஒப்புதலளித்ததன்பேரில் இனி ஹரி மேகன் தம்பதியரின் மகனும் மகளும் இளவரசர்கள் என அழைக்கப்படுவார்கள்.
Credit: Alexi Lubomirski
இதுவரை பக்கிங்காம் மாளிகையின் இணையதளத்தில் செல்வன் ஆர்ச்சி, செல்வி லிலிபெட் என ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இனி அவர்கள் பெயர்கள் இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என மாற்றம் செய்யப்படும் என பக்கிங்காம் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.