வெளிநாட்டுக்கு தப்பி சென்ற இந்திய வைர வியாபாரி! பொய்யான சத்தியபிரமாண வாக்குமூலத்தில் குடியுரிமை பெற்றது அம்பலம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு தலைமறைமான பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பொய்யான சத்தியபிரமாண வாக்குமூலத்தை கொடுத்து ஆன்டிகுவாவின் குடியுரிமையை பெற்றது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர வைர வியாபாரி மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார்.
பின்னர் தலைமறைவான அவர் சோக்சி ஆண்டிகுவா பர்படா தீவுகளில் வசித்து வந்தார். அங்கிருந்து கடந்த மாதம் 23-ந் திகதி மாயமானார்.
அடுத்த ஓரிரு நாட்களில் பக்கத்து தீவான டோமினிக்காவில் அவரை பொலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மெகுல் சோக்சி, பொய்யான சத்தியபிரமாண வாக்குமூலத்தை கொடுத்து, ஆன்டிகுவாவின் குடியுரிமையை பெற்றது அம்பலமாகி உள்ளது.
குடியுரிமைக்கான விண்ணப்பித்தபோது, தம் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் கிடையாது என்ற போலியான சத்திய பிரமாணத்தை சோக்சி தாக்கல் செய்தார் என ஆன்டிகுவா அமைச்சர் மெல்போர்டு நிக்கோலஸ் தெரிவித்தார்.
எனவே சோக்சியின் குடியுரிமையை ரத்து செய்ய உத்தரவிட்டதாகவும், ஆனால் அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடியதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையில் ஆன்டிகுவாவில் இருந்து தப்பி அருகில் டொமினிக்காவில் சிக்கியுள்ள சோக்சி ஒரு இந்திய குடிமகன் என்றும் அவரை என்ன செய்வது என நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.