அனைத்து நீதிபதிகளையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உலகின் முதல் நாடு
உலகின் அனைத்து நாடுகளிலும் நீதிபதிகள், அரசு மற்றும் ஜனாதிபதி மூலம் நியமனம் செய்யப்படுவார்கள்.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற ஒரு சில நாடுகளில் சில நீதிபதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்தல் மூலம் நீதிபதி தேர்வு
இந்நிலையில், உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்களுக்கான அனைத்து நீதிபதிகளையும் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 9 இடங்களும், 19 மாநிலங்களில் உள்ள சுமார் 1,800 உள்ளூர் பதவிகளுக்கும், 900 கூட்டாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்கான முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. 2 ஆம் கட்ட தேர்தல் 2027 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதைத் தடுக்கவும், நீதித்துறை செயல்பாட்டில் வாக்காளர்களுக்கு அதிக பங்களிப்பை வழங்கவும் இந்த மாற்றம் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி லோபஸ் ஒப்ராடோர் வாதிட்டார்.
ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில், வெறும் 13% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். நீதிபதிகளை தேர்வு செய்யும் நடைமுறை புதியதாக இருப்பதால் வாக்குவீதம் குறைந்ததாக கூறப்படுகிறது.
அறிமுகமில்லாத நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் இருந்ததால், அவர்களின் சுய விவரங்களை ஆய்வு செய்து வேட்பாளரை தேர்வு செய்ய பல மணி நேரங்கள் ஆகுவதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகளுக்கான தேர்தலில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிடக்கூடாது என கூறப்பட்டாலும், போதைப்பொருள் விற்பனைக் குழுவுடன் தொடர்பு, ஊழல், வன்கொடுமை என தீவிர குற்றப்பின்னணி உள்ள 20 வேட்பாளர் பட்டியலை உரிமைகள் அமைப்பான Defensorxs வெளியிட்டுள்ளது.
தேர்தல் மூலம் நீதிபதிகளை தேர்வு செய்வது அதன் சுயாதீன அதிகாரத்தை மட்டுபடுத்தும், ஆளும் கட்சி நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையில் அமையும். மேலும், குற்றவாளிகள் இதில் ஊடுருவும் வாய்ப்புள்ளது என இதில் உள்ள ஆபத்துகள் குறித்து பலரும் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |