புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 50 பேர் மாயம்: மீட்பு நடவடிக்கை தீவிரம்
கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் சுமார் 50 பேர் காணாமல் போனதை அடுத்து வான் மற்றும் கடல் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருவதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தெற்கு துருக்கியின் அண்டலியாவில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு இத்தாலி நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த படகு கார்பதோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுகளில் விடியற்காலையில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
அந்த படகில் சுமார் 80 பேர் இருந்ததாகவும், அதில் 50 பேர் வரை காணவில்லை என்றும் படகிலிருந்து மீட்கப்பட்ட 29 பேர் தெரிவித்ததாக கிரேக்க கடலோர காவல்படை பத்திரிகை அலுவலக அதிகாரி தெரிவித்தார்.
ஆனால், படகில் இருந்தவர்களின் எண்ணிக்கை 30 முதல் 60 வரை இருந்ததாக அரசு தொலைக்காட்சியான ERT தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணியில் நான்கு கப்பல்கள், இரண்டு கடலோர காவல்படை ரோந்து படகுகள் மற்றும் ஒரு கிரேக்க விமானப்படை ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மணிக்கு 50 கிலோமீட்டர் (30 மைல்) வேகத்தில் வீசுகின்ற பலத்த காற்று இந்த நடவடிக்கைக்கு இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளானவர்களில் பலர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.