புலம்பெயர் மக்கள் குற்றவாளிகள் அல்ல... ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக அண்டை நாட்டின் ஜனாதிபதி
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) லாஸ் ஏஞ்சல்ஸில் சோதனைகளை மேற்கொண்டபோது, 35 மெக்சிகோ நாட்டவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நல்லவர்கள்
இதற்கு பதிலளித்துள்ள மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், புலம்பெயர் மக்கள் குற்றவாளிகள் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரை ஆதரித்துப் பேசிய அவர்,
அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகன் மக்கள் நல்லவர்கள், தங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி, தங்கள் குடும்பங்களை காப்பாற்ற அமெரிக்காவிற்குச் சென்ற நேர்மையான மக்கள் அவர்கள் என்றார்.
அவர்கள் குற்றவாளிகள் அல்ல, நேர்மையான நல்லவர்கள் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வெள்ளிக்கிழமை, ஆயுதம் ஏந்திய மற்றும் முகமூடி அணிந்த ICE அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் ஒருங்கிணைந்த பணியிடச் சோதனைகளை மேற்கொண்டனர், இது கோபத்தையும் எதிர்ப்புகளையும் தூண்டியது.
இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் உள்ள பெடரல் கட்டிடங்களுக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் தெற்கே உள்ள பாரமவுண்டிலும் கூடுதல் போராட்டங்கள் வெடித்தன.
2,000 ஆவணமற்ற
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ICE அதிகாரிகள் வெளியேற வேண்டும் என முழக்கங்கள் இட்டனர். இதற்கிடையில், கூட்டத்தைக் கலைக்க பெடரல் அதிகாரிகள் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தினர்.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்த வாரம் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 ஆவணமற்ற குடியேறிகளைக் கைது செய்ததாக பெடரல் குடியேற்ற நிற்வாகம் தெரிவித்துள்ளது, இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 118 பேர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, 79வது காலாட்படை பிரிகேட் போர் குழுவைச் சேர்ந்த 300 வீரர்கள் கிரேட்டர் லாஸ் ஏஞசல்ஸ் பகுதியில் உள்ள மூன்று தனித்தனி இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், ட்ரம்பின் இந்த நடவடிக்கை என்பது கலவரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மக்களைத் தூண்டி விடுவதாகும் என கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |