ஆபத்தான அணு பொருட்களுடன் விபத்தில் சிக்கிய இராணுவ விமானம்: மொத்த பயணிகளும் மரணம்
அணுசக்தி பொருட்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஐந்து பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இம்பீரியல் கவுண்டியில் புதன்கிழமை குறித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்படை விமான தளமான எல் சென்ட்ரோ மூலம் விபத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானம் விபத்துக்கான காரணம் என்ன, விமானம் எந்த வகையான அணுசக்தி பொருட்களை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதனிடையே, குறைந்தபட்சம் 5 பேருடன் விமானத்தில் அணுசக்தி பொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை நடந்து வருகிறது என பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மீட்புக்குழுவினர் முதலில் நான்கு சடலங்களை கைப்பற்றியதாகவும், பின்னர் நீண்ட நேர தேடலுக்கு பிறகு, ஐந்தாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.