வெளிநாட்டில் கடத்தப்பட்ட 17 பேர்கள் தொடர்பில் முக்கிய திருப்பம்: பிணைத்தொகை கேட்டு மிரட்டல்
ஹெய்தி நாட்டில் அமெரிக்க- கனேடிய மிஷனெரிகள் 17 பேர்கள் கடத்தப்பட்ட நிலையில், தலா 1 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டு அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
16 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனேடியர் என மொத்தம் 17 மிஷனெரிகளை ஹெய்தியின் மிகவும் பலம் வாய்ந்த 400 Mawozo என்ற கும்பல் சனிக்கிழமை கடத்தி சென்றது.
ஒரு அனாதை இல்லத்திற்கு சென்று திரும்பிய நிலையிலேயெ இந்த 17 மிஷனெரிகளும் குறித்த அயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஒரு குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க 17 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹெய்தியின் நீதித்துறை அமைச்சர் Liszt Quitel திங்களன்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும் ஹெய்தி பொலிசாரும் கடத்தல் கும்பலிடம் தொடர்பு கொண்டு வருவதாகவும், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வர தாமதமாகலாம் என்றே கூறப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் 7 பெண்களும் ஐந்து சிறார்களும் உட்பட்டுள்ளனர் என அமைச்சர் Liszt Quitel தெரிவித்துள்ளார்.
மிஷனெரிகள் 17 பேர்கள் கடத்தப்படுவதற்கு சற்று முன்பு, கடத்தல்கள் மற்றும் பிற சம்பவங்களை காரணமாக கூறி ஹெய்திய போக்குவரத்து தொழிற்சங்கம் ஒன்று திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட இந்த 400 Mawozo கும்பலானது தினசரி ஹெய்தி பொலிசாருடனும் உள்ளூர் வணிக நிறுவனங்களிடமும் மோதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே 29 வெளிநாட்டவர்கள் உட்பட 628 கடத்தல் சம்பவங்கள் ஹெய்தியில் நடந்துள்ளன.
பொதுவாக 400 Mawozo கும்பலானது பிணைத்தொகையாக 20,000 டொலர் அளவுக்கே கோரிக்கை முன்வைக்கும் என கூறப்படுகிறது.