ஜேர்மனியில் காலியாக உள்ள 1.4 மில்லியன் பணியிடங்கள்: ஆனால்...
ஜேர்மனியில், 2024ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி 1.4 மில்லியன் பணியிடங்கள் காலியாக இருந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ஏராளமான புலம்பெயர்வோர் வேலைக்காக ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
ஆனால்...
ஆனால், ஜேர்மனிக்கு வந்துள்ள பணியாளர்களில் 2.6 மில்லியன் பேர், ஜேர்மனியிலிருந்து வெளியேற திட்டமிட்டதாக ஃபெடரல் வேலைவாய்ப்பு ஏஜன்சி மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அவர்களில் 300,000 பேர், ஜேர்மனியிலிருந்து நிச்சயம் வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
காரணம் என்ன?
ஜேர்மனியில் பல்வேறு துறைகளில் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
அப்படியிருந்தும், ஜேர்மனிக்கு வந்த புலம்பெயர் பணியாளர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப அல்லது வேறு நாடுகளுக்குச் செல்ல திட்டமிடுவது ஏன்?
சொந்த நாடுகளுக்கே மீண்டும் திரும்புபவர்களைப் பொருத்தவரை, அதற்கான காரணம், அவர்களுடைய குடும்பம்.
ஆனால், ஜேர்மனியிலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்ல புலம்பெயர்ந்தோர் திட்டமிட பல காரணங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானது, வரிகள், சமூக பாதுகாப்புக்கான வழங்கல் மற்றும் அதிகப்படியான அதிகாரத்துவம்.
அதற்கு அடுத்தபடியாக, வேலை செய்யும் இடத்திலும், வீடு வாடகைக்கு பிடித்தல், வாங்குதல் மற்றும் பொது இடங்களிலும், பொலிசாரிடமும் புலம்பெயர்ந்தோர் பாரபட்சத்தை எதிர்கொள்கிறார்கள்.
தங்களுக்கு வரவேற்பே இல்லை அல்லது கொஞ்சம்தான் வரவேற்பு உள்ளது என மூன்றில் ஒரு பங்கு புலம்பெயர்ந்தோர் கருதுகிறார்கள்.
இன்னொரு முக்கிய காரணம், அரசியல்வாதிகள்.
கடந்த தேர்தலை கவனித்தால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வலதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி, தற்போது ஆட்சியமைத்துள்ள கூட்டணிக் கட்சிகளில் ஒன்றும், புலம்பெயர்தலை மையமாக வைத்தே, அதாவது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறியே பிரச்சாரம் செய்தன.
சொன்னதுபோலவே, வெற்றி பெற்ற கட்சிகளில் ஒன்று, ஆட்சிக்கு வந்ததுமே எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டது.
ஆக, ஜேர்மன் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தாங்கள் பங்களிப்புச் செய்தும், தங்களை ஜேர்மனி பாரபட்சமாகவும், மோசமாகவும் நடத்துவதாலேயே, ஜேர்மனிக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் கூட, மீண்டும் வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் திட்டத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |