உலக அழகிப் போட்டியில் வெளியேறிய பிரித்தானிய பெண்..கூறிய அதிர்ச்சி காரணம்
தன்னை ஒரு விலைமாதுவைப் போல் உணரச் செய்ததால் உலக அழகிப் போட்டியில் இருந்து வெளியேறியதாக பிரித்தானிய இளம் பெண் தெரிவித்துள்ளார்.
உலக அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று
இந்திய மாநிலம் தெலங்கானாவில் அடுத்த வாரம் உலக அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் அழகிகள் வந்துள்ளனர்.
அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த 24 வயது மில்லா மாகியும் (Milla Magee) கலந்துகொண்டார்.
ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அவர் வெளியேறியதால், 'மிஸ் இங்கிலாந்து 2024' போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லோட் கிரான்ட் (25) பிரித்தானியாவின் சார்பில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
பிரித்தானிய அழகி
இந்த நிலையில் லண்டன் திரும்பிய மில்லா, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பல காரணங்களை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "ஆறு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மேசையிலும் இரண்டு பெண்கள், கட்டாயமாக அமர வைக்கப்பட்டனர். அதை என்னால் நம்ப முடியவில்லை; அவர்களின் பொழுபோக்குக்காக நான் வரவில்லை.
அவர்களின் செயல்கள் வாயிலாக, என்னை ஒரு விலைமாதுவைப் போல் உணர வைத்தனர். அவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தைக்காட்டும் குரங்குகளைப் போல அமர்ந்திருந்தோம். என்னால், அதைத் தாங்க முடியவில்லை.
இதெல்லாம் சிறிய நிகழ்வுதான். உண்மையில் எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தனர் என்பது மரியாதைக் குறைவாக அவர்கள் நடந்துகொண்ட விதமே காட்டிக் கொடுத்தது.
உலக அழகி என்ற பட்டத்துக்கென தனி மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் பழைய காலத்திலேயே சிக்கிக் கிடக்கிறது.
உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்கள் குரலைப் பயன்படுத்தும்போது, உலகில் உள்ள அனைத்து கிரீடங்களும் ஒன்றுமே கிடையாது. எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே, நான் வெளியேறினேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |