பாலஸ்தீன ஆதரவு உரை: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவிக்கு MIT தடை
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உரையாற்றிய இந்திய வம்சாவளி மாணவிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க MIT தடை விதித்துள்ளது.
இந்திய மாணவிக்கு தடை
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பயிலும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, காசா போரைக் கண்டித்தும் இஸ்ரேலை விமர்சித்தும் உரையாற்றியதால், அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி, வியாழக்கிழமை (மே 29) நடைபெற்ற "ஒன்எம்ஐடி" (OneMIT) தொடக்க விழாவில் உரையாற்றினார்.
அப்போது, அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலைக் கண்டித்தும் பேசினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடிய தனது சக மாணவர்களைப் பாராட்டியதுடன், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளையும் விமர்சித்தார்.
அவரது உரைக்குப் பிறகு, மேகா வெமுரி மீது எம்ஐடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம் குற்றச்சாட்டு
"எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது.
ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்" என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |