சிங்கப்பூர் விமானத்தில் வெடித்த மொபைல் போன் சார்ஜர்: உயிர் தப்பிய 189 பயணிகள்
விமானம் ஒன்றிற்குள் மொபைல் சார்ஜர் ஒன்று வெடித்ததால் தீப்பற்றிய நிலையில், அழகிய விமானப் பணிப்பெண்களின் சாதுர்யத்தால் 189 பயணிகள் உயிர் தப்பினார்கள்.
விமானத்திற்குள் வெடித்த மொபைல் சார்ஜர்
நேற்று முன்தினம், தைவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட தயாராக இருந்தது விமானம் ஒன்று.
விமானத்தில் 189 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், பயணி ஒருவரின் மொபைல் சார்ஜரில் (power bank) திடீரென பயங்கர கரும்புகை எழத்துவங்கியது.
பயந்துபோன அவர் அந்த சார்ஜரைத் தரையில் வீச, உடனே அது குப்பென தீப்பற்றியுள்ளது. தீயும் புகையும் எழுந்ததைக் கண்ட பயணிகள் அலறி சத்தமிடத் துவங்கினர்.
சாதுர்யமாக செயல்பட்ட விமானப் பணிப்பெண்கள்
உடனடியாக ஓடோடி வந்த விமான பணிபெண்கள் தீயணைக்கும் கருவிகள் உதவியுடன் தீயை அணைத்தனர்.
அத்துடன், மக்களையும் பயப்படாமல் அமைதியாக இருக்கும்படி கூறி நிலைமையையும் கட்டுப்படுத்தி, பின்னர் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தை சமூக ஊடகத்தில் பார்த்த ஒருவர், நாம் விமானப் பணிப்பெண்கள் என்றாலே, அவர்களுடைய அழகைப்பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், அவர்கள் வலிமையானவர்கள், இப்படிப்பட்ட செயல்கள்தான் அவர்கள் வலிமையானவர்கள் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.
எப்படியும் சாதுர்யமாக செயல்பட்ட பணிப்பெண்களின் செயலால், 189 பயணிகள் எந்த பிரச்சினையுமின்றி உயிர் தப்பியுள்ளார்கள்.
அந்த மொபைல் சார்ஜரை வைத்திருந்தவர் மற்றும் அவரது சக பயணி ஆகிய இருவருக்கும் மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.