மீண்டும் ஊரடங்கா? கொரோனா காலம் போல் தயாராக மோடி அறிவுறுத்தல்
ஈரான் போர் சூழலால், கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஈரான் போர்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக, உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த போர் சூழலுக்கு இடையே கச்சா எண்ணெய், பெட்ரோல், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் இது குறித்து விளக்கமளித்த பிரதமர் மோடி, கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என பேசியுள்ளார்.
மோடி விளக்கம்
இது குறித்து பேசிய அவர், "தற்போது நடைபெற்று வரும் இந்த மோதலால் உலகம் முழுவதும் நிலவும் இந்த கடினமான சூழ்நிலைகளின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் போதும் இதுபோன்ற பல சவால்களை நாம் எதிர்கொண்டோம், இப்போது அவற்றை மீண்டும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு சவாலையும் நாம் பொறுமை, நிதானம், ஒற்றுமை மற்றும் அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டும், இதுவே நமது அடையாளம், இதுவே நமது பலம்.
போலிச் செய்திகளைப் பரப்புபவர்கள், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
#WATCH | On the West Asia conflict, Prime Minister Narendra Modi says, "The difficult conditions created in the world by this war are likely to have lasting effects for a long time, so we must be prepared and remain united. We have faced such challenges with unity during the… pic.twitter.com/MCv6tiqyRq
— ANI (@ANI) March 23, 2026
போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடனும், அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுடனும் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. போர் நடைபெறும் பிராந்தியம், பிற நாடுகளுடனான நமது வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் கணிசமான பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், அந்த வழித்தடத்தின் வழியாக கப்பல்களின் இயக்கம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.
இருந்தபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து பணிபுரிந்து வருகின்றனர். கடலில் செல்லும் வணிக கப்பல்களில் உள்ள இந்திய மாலுமிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால், இந்தியாவின் கவலைகள் இயல்பாகவே அதிகமாக உள்ளன.
போர் தொடங்கியதிலிருந்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் காலகட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இத்தகைய கடினமான நேரங்களில், குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
தனிப்பட்ட முறையில் பெரும்பாலான மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் 2 கட்டங்களாக தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்தியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்" என கூறியுள்ளார்.
பல நாடுகளில் கட்டுப்பாடு
ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியுமாறும், பள்ளிகள், கல்லூரிகள் இணைய வழியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக கொரோனோ காலத்தில் உலகம் முழுவதும் இது போன்ற ஊரடங்கு சூழலை பொதுமக்கள் எதிர்கொண்டனர்.
தற்போது இந்திய பிரதமர் மோடி, கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என பேசிய நிலையில், இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |