எதிர்பார்த்ததைவிட அதிக தொகை... ஜேர்மனி குழந்தைகளுக்காக செய்ய இருக்கும் உதவி
ஜேர்மனி குழந்தைகளுக்கான உதவித்தொகையை அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்க உள்ளது.
ஜேர்மன் அரசு, ஆற்றல் உதவி பாக்கேஜின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கான நிதி உதவியை எதிர்பார்த்ததைவிட கூடுதலாக்க சம்மதித்துள்ளது.
எவ்வளவு தொகை கிடைக்கும்?
கூட்டணி அரசின் திட்டப்படி, குடும்பத்திலுள்ள முதல் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் ஒன்றிற்கு 250 யூரோக்களும், 2023 ஜனவரி முதல், மூன்றாவது குழந்தைக்கு 275 யூரோக்களும் வழங்கப்பட உள்ளது.
இது, முன் அறிவிக்கப்பட்ட தொகையிலிருந்து, முதல் இரண்டு குழந்தைகளுக்கான தொகையைப் பொருத்தவரை 31 யூரோக்களும், மூன்றாவது குழந்தைக்கு 25 யூரோக்களும் அதிகமாகும்.
இந்த மாற்றம் குறித்துப் பேசிய குடும்ப நலத்துறை அமைச்சரான Lisa Paus, பணவீக்கத்தால் குழந்தைகளை உடைய குடும்பங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக, வாடகை உயர்வு, உணவுப்பொருட்கள்மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு ஆகியவற்றால், குழந்தைகள் இல்லாத குடும்பங்களை விட, குழந்தைகளை உடைய குடும்பங்கள் அதிகம் செலவிடவேண்டியுள்ளதால் அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், எதிர்பார்த்ததைவிட அவர்களுக்கு கூடுதல் உதவி செய்ய முடிந்தது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளும் ஆதரவு
இந்த உதவிக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முந்தைய திட்டத்தின்படி, மூன்று குழந்தைகள் உடைய குடும்பங்களுக்கு, குழந்தை ஒன்றிற்கு மாதம் ஒன்றிற்கு 237 யூரோக்கள் வழங்கப்படுவதாக இருந்தது.
அந்த திட்டத்தின்படி, முதல் இரண்டு குழந்தைகளுக்கு கூடுதலாக 18 யூரோக்களும், மூன்றாவது குழந்தைக்கு கூடுதலாக 12 யூரோக்களும் வழங்கப்பட இருந்தது, தற்போது அது, மேலும் அதிகரிக்கப்பட்டு,முதல் இரண்டு குழந்தைகளுக்கான தொகையைப் பொருத்தவரை 31 யூரோக்களும், மூன்றாவது குழந்தைக்கு 25 யூரோக்களும் அதிகமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.