மகளிர் மருத்துவத்தில் இலங்கை, பிரித்தானிய மற்றும் அமெரிக்க அறிவியலாளர்களின் திருப்புமுனை கண்டுபிடிப்பு
கர்ப்பிணிகளின் மசக்கை தொடர்பில் மருத்துவ உலகில் திருப்புமுனையாக அமையக்கூடிய முக்கிய கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளது, இலங்கை, பிரித்தானிய மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் குழு ஒன்று.
மசக்கை என்பது என்ன?
மசக்கை, கர்ப்பிணிகளுக்கு காலையில் தோன்றும் குமட்டல், morning sickness என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த விடயத்தின் அறிவியல் பெயர், hyperemesis gravidarum (HG) என்பதாகும்.
Pic:Istock
இந்த மசக்கையால் பல பெண்கள் கடுமையான வாந்தி, தலைசுற்றல் மற்றும் நீரிழப்பால் அவதியுற்று, சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையையும் அடைகிறார்கள்.
மசக்கை ஏற்படுவது எதனால்?
இந்நிலையில், இலங்கை, பிரித்தானிய மற்றும் அமெரிக்க அறிவியலாளர்களைக் கொண்ட குழு ஒன்று, மசக்கைக்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளது.
அதாவது, பெண்கள் கர்ப்பமுறும்போது, அவர்களுடைய கர்ப்பத்திலிருக்கும் கரு அல்லது குழந்தை, GDF15 என்னும் ஹார்மோனை உருவாக்குகிறது என்றும், அந்த ஹார்மோன்தான் அந்த குழந்தையை சுமக்கும் தாய்க்கு குமட்டல், தலைசுற்றல், வாந்தி முதலான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
Image: iStock
இந்த GDF15 என்னும் ஹார்மோன், உடலின் பல உள்ளுறுப்புகளால் மிகக் குறைவான அளவில் சாதாரணமாகவே உருவாக்கப்படும் ஒரு ஹார்மோன்தான். ஆனாலும், இந்த ஹார்மோனை குறைவான அளவில் சுரக்கும் பெண்களின் உடல், அதாவது எந்தெந்த பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் குறைவாக உள்ளதோ, அவர்கள் கர்ப்பமுறும்போது, அவர்கள் அதிக hyperemesis gravidarum (HG), அதாவது மசக்கையால் அவதியுறுகிறார்கள். அதாவது, அவர்கள் உடல், இந்த ஹார்மோனுக்கு பழகவில்லை, அவர்கள் அதிக சென்சிட்டிவாக இருப்பதால், அவர்கள் கருவிலிருக்கும் குழந்தை உருவாக்கும் இந்த ஹார்மோன், அவர்களை படாதபாடு படுத்திவிடுகிறது.
அறிவியலாளர்களின் திருப்புமுனை கண்டுபிடிப்பு...
விடயம் என்னவென்றால், இந்த கண்டுபிடிப்பு, மருத்துவ உலகில், அல்லது மகளிர் மருத்துவத்தில், அல்லது தாய் சேய் மருத்துவத்தில் திருப்புமுனையாக அமையக்கூடிய முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.
அதாவது, எது மசக்கைக்குக் காரணம் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டதால், மசக்கைக்கு மருந்து கண்டுபிடிக்கும் காலமும் நெருங்கிவிட்டது எனலாம்.
அப்படி மசக்கைக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது பெண்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |