ரஷ்யாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: பொறுப்பேற்ற ஆப்கான் குழு
ரஷ்யாவில் கச்சேரி அரங்கம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட படுபயங்கரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இதுவரை 60 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 100 கடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ISIS-K அமைப்பு
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு ஒன்று முன்னெடுக்கும் மிகப்பெரிய தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.
கடந்த 2015ல் எகிப்தின் சினாய் பாலைவனத்தின் மீது 224 பேர்களுடன் பயணித்த ரஷ்ய விமானம் ஒன்று வெடித்துச் சிதறியது. அந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றதுடன், ஆதாரங்கலையும் வெளியிட்டது.
2017ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது.
மட்டுமின்றி, பல தசாப்தங்களாக நாட்டின் வடக்கு காகசஸ் பகுதியில் ரஷ்யப் படைகளுடன் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் சண்டையிட்டும் வருகின்றன. ஐ.எஸ் அமைப்பு உருவானபோது பெரும் எண்ணிக்கையிலான ரஷ்யர்கள் சிரியாவுக்கு சென்று அந்த அமைப்பில் இணைந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களை அடிமைகளாக
தற்போது மாஸ்கோ தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ISIS-K என்ற அமைப்பானது 2014 முதல் ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவலாக செயல்பட்டுவரும் குழுவாகும்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்துள்ள ISIS-K அமைப்பு, இஸ்லாமியர்களை அடிமைகளாக நடத்துவதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனிடையே, மாஸ்கோ மீதான தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே எச்சரித்ததாக வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |