தண்டவாளத்தை கடந்த மகள்களை காப்பாற்ற சென்ற தாய் ரயில் மோதி மரணம்
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்த மகள்களை காப்பாற்ற சென்ற தாய் ரயில் மோதி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம் வந்த தாய் மற்றும் மகள்
தமிழகத்தில் உள்ள சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு சுபிக்ஷா (22) மற்றும் வர்ஷா (19) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 06) விடுமுறை நாள் என்பதால் புது துணிகளை வாங்குவதற்கு தியாகராயர் நகர் சென்றுள்ளனர்.
அங்கு, கடைகளில் பொருள்களை வாங்கி விட்டு திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டிற்கு செல்ல தி.நகரில் இருந்து புறநகர் ரயிலில் சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
தாய் மரணம்
அப்போது, அவர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பறக்கும் ரயிலில் செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.
அந்த சமயத்தில், அதிக வேகமாக வந்த மின்சார ரயிலை பார்த்து அதிர்ச்சியான தாய் சித்ரா தன்னுடைய இரண்டு மகள்களை காப்பாற்ற ஓடி வந்தார். அப்போது, அவர் தன்னுடைய மகள்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு காப்பாற்றினார்.
ஆனால், வேகமாக வந்த மின்சார ரயிலானது சித்ரா மீது மோதியதில், அவரது உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்களுடைய கவனக்குறைவினால் தாய் உயிரிழந்ததை பார்த்து மகள்கள் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |