பிரான்சில் சிறுமி சீரழிக்கப்பட்ட விவகாரம்: பிரான்ஸ் அரசு, நீதித்துறை அமைச்சர் மீது வழக்கு
பிரான்சில் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்ட வழக்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்பில், பிரான்ஸ் அரசு மீதும், பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் மீதும் வழக்குத் தொடர பெண்ணொருவர் முடிவு செய்துள்ளார்.
மாயமான சிறுமி சடலமாக மீட்பு
கடந்த மாதம் 29ஆம் திகதி, தென்மேற்கு பிரான்சிலுள்ள Fleurance என்னும் நகரில் வாழ்ந்துவந்த லிஹானா (Lyhanna, 11) என்னும் சிறுமி காணாமல் போனாள்.

அவள் கடைசியாக தன் பள்ளித் தோழி ஒருத்தியின் தந்தையின் காரில் ஏறிச் சென்ற நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு, கைவிடப்பட்ட உணவு தானிய சேமிப்பகம் ஒன்றில் அவளது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
லிஹானாவை காரில் ஏற்றிச் சென்ற ஜெரோம் (Jerome Barella 41) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடயம் என்னவென்றால், ஜெரோம் மீது ஏற்கனவே சிறுமிகள் பலரை சீரழித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இருந்தும், நீதித்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு ஜெரோம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், லிஹானாவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால் மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.
பிரான்ஸ் அரசு, நீதித்துறை அமைச்சர் மீது வழக்கு
கடந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, தன் மகளை இதே ஜெரோம் சீரழித்ததாக அவளது தாய் புகாரளித்திருந்தார்.

அவரது குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவப்பூர்வமாக ஆதாரம் இருந்த நிலையிலும், தற்போது லிஹானா காணாமல் போகும் வரை பொலிசார் ஜெரோமிடம் விசாரணை நடத்தவில்லை.
ஆகவே, ஜெரோமால் சீரழிக்கப்பட்ட அந்த 10 வயது சிறுமியின் தாய், தன் மகள் விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பிரான்ஸ் அரசு மீதும், நீதித்துறை அமைச்சரான ஜெரால்ட் டார்மனின் மீதும் வழக்குத் தொடர உள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |