லண்டனில் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகின: அவரைக் குத்தியது யார்?
நேற்று முன்தினம், லண்டனில் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதுடன், அவரை கொடூரமாக கொலை செய்தவர், அவரது முன்னாள் கணவர் என்பதும் தெரியந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை, வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Maida Vale என்ற இடத்தில், 41 வயதுள்ள ஆண் ஒருவர், 43 வயதுள்ள பெண் ஒருவரை, பட்டப்பகலில், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் பெரிய கத்தி ஒன்றால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.
அவரை யாராலும் தடுக்க இயலாததால், ஒருவர் அவர் மீது தனது காரை மோதி அவரைத் தடுக்க முயன்றிருக்கிறார். கார் மோதியதில் அந்த நபர் உயிரிழந்த அதே நேரத்தில், கத்தியால் குத்தப்பட்ட பெண் மீதும் கார் ஏற, அவரும் சற்று நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.
கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் Wafah Chkaifi (43) என்றும், மொராக்கோ நாட்டுப் பின்னணி கொண்டவர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். வட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு பெரிய குடும்பப் பின்னணியைக் கொண்ட Wafah, பிரித்தானியாவில் பிறந்து, லண்டனிலுள்ள Maida Vale பகுதியில் வாழ்ந்துவந்துள்ளார். அவருக்கு 16 மற்றும் 18 வயதில் இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், Wafahவைக் கத்தியால் குத்தியவர் பெயர் Leon Mccaskie (41) என்றும், அவர் Wafahவின் முன்னாள் கணவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ள நிலையிலும், Wafahவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார் Leon.
இரண்டே வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில், அந்த இரண்டு வருடங்களும் கூட Leon, Wafahவைக் கொடுமைப்படுத்தியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Leon மீது பொலிசில் புகாரளிக்கப்பட்டு, அவர் Wafahவைத் தொந்தரவு செய்யக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற வாரம் அவர் நீதிமன்றத்தில் ஆஜாராகவேண்டிய நிலையில், அவர் ஆஜராகவில்லையாம். அப்போதே பொலிசார் ஏதாவது செய்திருக்கவேண்டும்.
ஆனால், பலமுறை கோரியும் பொலிசார் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்கிறார் Wafahவின் மகன்களில் ஒருவர்.
இந்நிலையில், Leon மீது காரை ஏற்றிய அந்த நபரை Wafahவின் குடும்பத்தினர் பெரிதாக புகழ்ந்துள்ளார்கள். அவர் ஒரு ஹீரோ, எங்கள் குடும்பம் அவரை சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவிக்க காத்திருக்கிறது. சாலையில் சென்றுகொண்டிருந்த அவர், ஒரு பெண் தாக்கப்படுவதைக் கண்டு, அதைத் தடுக்கமுயன்றிருக்கிறார்.
அவர் கைது செய்யப்படக்கூடாது, அவருடைய தைரியத்துக்காக அவருக்கு விருது வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்கள் Wafahவின் குடும்பத்தினர்.