5 வயது சிறுவனின் இறுதிச்சடங்கு... பாய்ந்து வந்த ஏவுகணை: நடுங்க வைத்த சம்பவம்
இஸ்ரேலில் ரொக்கெட் வீச்சுக்கு பலியான 5 வயது சிறுவனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் ஏவுகணை தாக்குதலுக்கு பயந்து ஒளிந்து கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் Kiryat Gat என்ற நகரிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ரொக்கெட் வீச்சுக்கு பலியான சிறுவன் Ido Avigal-ன் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று, ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனையடுத்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மக்கள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக தரையில் கவிழ்ந்து படுத்துக்கொண்டுள்ளனர்.
Kiryat Gat பகுதியானது உண்மையில் குறிப்பிடத்தக்க இலக்கு அல்ல, ஆனால் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே ரொக்கெட் வீசியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, இதுபோன்ற செயல்களால் ஹமாஸ் எங்கள் துயரங்களை இரட்டிப்பாக்குகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காசா முனையில் இருந்து ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலில் சிறுவன் Ido Avigal கொல்லப்பட்டான். அவனது தாயார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
சிறுவனின் மரணம் அப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பாதுகாப்பு அறையில் இருந்த சிறுவன் கொல்லப்பட்டதே அவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் சிறுவனின் தந்தையை நேரில் சந்தித்த இஸ்ரேல் ஜனாதிபதி Reuven Rivlin, சிறுவனின் குடும்பத்தினரை தேற்றியதுடன், மொத்த மக்களின் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு என உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் இதுவரை ஹமாஸ் துருப்புகள் மீது 600 முறை வான் தாக்குதல் முன்னெடுத்துள்ளது. 3 அடுக்குமாடி கட்டிடங்களையும் மொத்தமாக சேதப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் துருப்புகளுக்கு சொந்தமான ஆயுத கிடங்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
பதிலுக்கு ஹமாஸ் தரப்பு 1,800 ரொக்கெட்களை இஸ்ரேல் மீது வீசியுள்ளது.