குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி... கணவன் கண் முன்னே இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவரை அவரது கணவரின் கண் முன்னே கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளது ஒரு கும்பல். நேற்று அதிகாலை, பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
பாபிஸை அவர்கள் கயிற்றால் கட்டி தரையில் வீசிவிட்டு, கரோலினை கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைத்துவிட்டு, எங்கே பணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு கரோலினை மிரட்டியிருக்கிறார்கள்.
தன் அன்பிற்குரியவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயந்த பாபிஸ், தான் பணம் வைத்திருந்த பெட்டி எங்கே இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள், மேலும் பணமும் நகையும் வேண்டும் என்று கூறி, அவர்களது 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, வீட்டில் வேறு எங்கே பணமும் நகைகளும் இருக்கின்றது என்று கேட்க, கரோலின் சத்தமிட்டிருக்கிறார்.
பாபிஸும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், என் மனைவியையும் குழந்தையையும் எதுவும் செய்யாதீர்கள் என்று கதறியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் திடீரென கரோலின் அமைதியாகிவிட்டிருக்கிறார். கொள்ளையர்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
நடந்தது என்னவென்றால், கரோலின் சத்தமிட்டதால், அவரது கழுத்தை துணியால் ஒருவன் நெறித்திருக்கிறான். அதில் அவர் இறந்துவிடவே, கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
போன் ஒன்றைத் தேடிப்பிடித்த பாபிஸ், மூக்கை வைத்தே அவசர உதவியை அழைத்திருக்கிறார். பொலிசார் வந்து பாபிஸை மீட்டதுடன் குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
CCTV காட்சிகளின் அடிப்படையில், பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். கிரீஸில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அபூர்வம் என்பதால், இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.