பட்டினியில் குடும்பம் வாடுகிறது... என் பிள்ளையை விற்கப் போகிறேன்: ஆப்கன் தந்தையின் கண்ணீர்
மொத்த குடும்பமும் பசியால் வாடுகிறது என்பதால் தமது மகளை விற்க தயாராகி வருவதாக ஆப்கானிஸ்தான் தந்தை ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனால் தமது 4 வயது மகளை 420 பவுண்டுகளுக்கு விற்க முடிவு செய்துள்ளதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார். தாலிபான்களின் கீழ் நரக வாழ்க்கையை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான மக்களில் மிர் நசீர் என்பவரும் ஒருவர்.
நாட்டைவிட்டு வெளியேற முடியாமல், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியுடன் பொருத்தப்படவே மிர் நசீர் முடிவு செய்துள்ளார். பணவீழ்ச்சி காரணமாக பொருளாதாரம் மொத்தமாக ஸ்தம்பித்துப்போயுள்ள நிலையில், மக்கள் உயிர் வாழ தங்களிடம் இருக்கும் பொருட்கள் மொத்தமும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 38 வயது முன்னாள் பொலிஸ் அதிகாரியான மிர் நசீர் தமது மகளை விற்கும் பரிதாப நிலையில் உள்ளார். பிள்ளைகள் இல்லாத ஒரு கடை ஊழியருக்கு தமது 4 வயது மகளை மிர் நசீர் விற்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
சொந்த பிள்ளையை விற்கும் இழி நிலையை விட சாவதே மேல் என்பது எனக்கு தெரியும் என கூறும் மிர் நசீர், ஆனால் எனது சாவால் குடும்பத்தின் பட்டினி தீர்ந்துவிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கன் பணத்தில் தமக்கு 20,000 தருவதாக அந்த நபர் வாக்குறுதி அளித்ததாகவும், தமது 4 வயது மகள் சஃபியா இனி அவருடன் வாழ்வதுடன் அவரது கடையில் பணியும் செய்வார் என மிர் நசீர் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறைவான தொகைக்கு தமது மகளை விற்பதாக இல்லை எனவும், அதனால் 50,000 கேட்டிருப்பதாகவும், இறுதியான முடிவு எட்டவில்லை எனவும் மிர் நசீர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்கள் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு முன்பு நசீர் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் காபூலுக்கு தப்பிச் சென்றார், இப்போது சந்தையில் ஒரு போர்ட்டராக வேலை செய்கிறார், ஆனால் அவரது குடியிருப்புக்கான வாடகை செலுத்த அவரது ஊதியம் போதுமானதாக இல்லை.
போர் முடிவுக்கு வந்துள்ளது நிம்மதிதான், ஆனால் இப்போது நாட்டுக்கு புதிய எதிரிகள் வந்து விட்டார்கள் என்கிறார் மிர் நசீர்.