வேண்டும் என்றே கொரோனாவை வரவழைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! வேதனையில் தவிக்கும் மகன்
கொரோனாவை வலுக்கட்டாயமாக வரவழைத்து, பிரபல பாடகி உயிரிழந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
கொரோனாவிடம் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொரோனா தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அப்படி செக் குடியரசின் கிராமியப் பாடகரான ஹானா ஹோர்கா, கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலே இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் சமீபத்தில், வேண்டும் என்றே தனக்கு கொரோனா தொற்று ஏற்படும் படி செய்தார். அதன் படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். அதன் பின் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள விடுதிகள், பார்கள், திரையரங்குகள், கலை நிகழ்ச்சிக் கூடாரங்களில் நுழைய இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, 57 வயது மதிக்கத்தக்க கலைஞரான ஹானா ஹோர்கா, தடுப்பூசி செலுத்திக் கொள்வதைவிட கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இயற்கையாக எதிர்ப்பாற்றலைப் பெற விரும்பினார். இதனால், தனது கணவருக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று உண்டான போது அவர் அவர்களுடன் இயல்பாக கூடவே இருந்துள்ளார்.
இதனால் அவரும் தொற்றுக்கு உள்ளானார். ஆனால் அவருக்கு நோய் பாதிப்பு தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் தீவிரமடைந்தது. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து ஹானாவின் மகன் ரெக் அளித்த பேட்டியில், எனது தாயாரின் மறைவுக்குக் காரணம் உள்ளூரில் உள்ள தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் குழு தான். அவர்கள் பிரச்சாரத்தாலேயே என் தாயார் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இன்று அவர் இறந்துவிட்டார். அந்த ரத்தக் கறை உள்ளூர் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் கைகளில் உள்ளது.
கொரோனா வந்து சென்றால் இயற்கையாக நிலையான எதிர்ப்பாற்றல் வரும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் எதற்காக இப்படியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.