அணு உலை வெடித்த இடத்தில் கதிரியக்கத்தையும் மீறி செழித்து வளரும் பூஞ்சை
அணு உலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிரியக்கத்தையும் மீறி, செர்னோபில்லில் பூஞ்சை ஒன்று செழித்து வளரும் விடயம் அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கதிரியக்கத்தையும் மீறி செழித்து வளரும் பூஞ்சை
முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் இந்நாள் உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில்லில், 1986ஆம் ஆண்டு அணு உலை ஒன்று வெடித்தது.

இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்து சுமார் 40 ஆண்டுகள் ஆகும் நிலையில், மனிதர்கள் அங்கு வாழவே முடியாது என ஆகிவிட்ட நிலையில், பூஞ்சை ஒன்று செழித்து வளர்வதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
க்ளாடோஸ்போரியம் ஸ்பேரோஸ்பெர்மம் (Cladosporium sphaerospermum) என்னும் பூஞ்சைதான் அது.

இந்த க்ளாடோஸ்போரியம் பூஞ்சை கருப்பு நிறத்தில் உள்ளது. அதற்குக் காரணம், அந்த பூஞ்சையில் மெலானின் என்னும் ஒரு நிறமி உள்ளது.
முக்கிய விடயம் என்னவென்றால், இந்த மெலானின் அந்த பூஞ்சைக்கு நிறத்தை மட்டும் கொடுக்காமல், அது அந்த பூஞ்சையை பாதுகாக்கவும் செய்வதாக சில அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.

அந்த மெலானின் என்னும் நிறமி, கதிரியக்கத்திலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்ய க்ளாடோஸ்போரியம் பூஞ்சைக்கு உதவுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
Photosynthesis என அழைக்கப்படும் ஒளிச்சேர்க்கையை ஒத்திருக்கும் இந்த செயல்முறையை, அறிவியலாளர்கள் radiosynthesis, அதாவது, கதிரியக்கத்திலிருந்து உணவு தயாரிக்கும் செயல்முறை என அழைக்கிறார்கள்.
அணு உலை வெடித்ததால் தொடரும் கதிரியக்கத்தை நீக்க ஆய்வாளர்கள் போராடி வரும் நிலையில், இந்த க்ளாடோஸ்போரியம் பூஞ்சை கதிரியக்கத்தை தனது உணவுக்காக பயன்படுத்துவதாக நம்பப்படுவதால், ஒருவேளை அது இயற்கையாகவே கதிரியக்கத்தை நீக்கும் ஒரு அருமருந்தாக அமையுமோ என்றும் சில ஆய்வாளர்களால் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதை இன்னமும் ஆய்வுகள் மூலம் முழுமையாக உறுதி செய்யவில்லை என்றாலும், மனிதர்களால் வாழ இயலாத இந்த கதிரியக்கம் நிறைந்த இடத்தில், ஏதோ மாயம் செய்து இந்த க்ளாடோஸ்போரியம் பூஞ்சை செழித்து வளர்வது மட்டும் உண்மை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |