கடவுள் அருளால் அற்புதம் நடக்கும்! வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள தமிழ் இளைஞரை நினைத்து கலங்கும் சகோதரி
மலேசிய தமிழர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கருணை காட்டி இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சகோதரி சர்மிளா கோரியுள்ளார்.
மலேசியாவில் இருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்திய வழக்கில் 33 வயதான நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த புதன்கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன் காரணமாக தூக்கு தண்டையானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகேந்திரனுக்கு அரசாங்கம் இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் அவரது மூத்த சகோதரி சர்மிளா கூறியுள்ளார்.
35 வயதான சர்மிளா கூறுகையில், சிங்கப்பூர் அரசு அவரது உயிரை காப்பாற்றும் என நம்புகிறோம். அவர் அறிவுசார் இயலாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம்.
நான் அற்புதங்களை நம்புகிறேன்... கடவுள் அருளால் ஒரு அதிசயம் நடக்கும். என் சகோதரர் அன்பானவர், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர். கூச்ச சுபாவமுள்ளவரான நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தலுக்கு வற்புறுத்தப்பட்டதாக தான் கருதுவதாக சர்மிளா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாகேந்திரனை சிறையில் சென்று பார்த்த போது அவர் ஒழுங்கற்ற மற்றும் மன அழுத்தத்தில் இருந்தார். அவர் தூக்கிலிடப்படுவார் என்று அவருக்குத் தெரியும், ஆனால் அவர் வீட்டிற்கு வந்து தனது தாயை கவனித்துக் கொள்ள விரும்புவதாக எங்களிடம் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் சிறுவயதில் நாகேந்திரனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை கண்ணீருடன் காட்டிய சர்மிளா, என் தம்பி வீட்டிற்கு வர வேண்டும் என கண்ணீருடன் பேசியுள்ளார்.