இந்தியாவிற்கு கோப்பை வழங்காத அமைச்சர் - தங்க பதக்கம் வழங்க உள்ள பாகிஸ்தான்
இந்தியாவிற்கு ஆசிய கோப்பை வழங்காத நக்விக்கு பாகிஸ்தானில் தங்க பதக்கம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு கோப்பை தராத நக்வி
பகல்ஹாம் தாக்குதல் காரணமாக 2025 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென குரல்கள் எழுந்தது.
ஆனால், ஆசிய கோப்பையில் பங்குபெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மொஹ்சின் நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராகவும் உள்ளார்.
இதன் காரணமாக கோப்பையை வென்ற இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோப்பையை தர மறுத்து தன்னுடன் கொண்டு சென்ற நக்வி, கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்னும் இந்திய அணியின் கைக்கு கோப்பை கிடைக்கவில்லை.
நக்விக்கு தங்கப்பதக்கம்
இந்நிலையில், இந்திய அணிக்கு கோப்பையை வழங்காததன் காரணமாக, மொஹ்சின் நக்விக்கு பாகிஸ்தானில் விழா எடுத்து தங்கப்பதக்கம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து சங்கங்களின் தலைவரான குலாம் அப்பாஸ் ஜமால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இந்தியாவுடன் அரசியல் மற்றும் விளையாட்டு பதற்றங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் நக்வியின் நடவடிக்கைகள் தேசிய பெருமையை மீட்டெடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
விரைவில் கராச்சி நகரில் நடைபெற உள்ள இந்த விழாவில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |