தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு
பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கிண்ணம் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்த நிலையில் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்தார்.
விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி, பிப்ரவரி 20 முதல் மார்ச் 14 வரை நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் நடராஜன் நிச்சயம் இடம்பெற இருப்பதால் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், மார்ச் 8 அன்று நிறைவுபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் மார்ச் 12 முதல் 20 வரை நடைபெறுகிறது.
ஒருநாள் தொடர் புனே நகரில் மார்ச் 23 முதல் 28 வரை நடைபெறுகிறது.
தமிழக அணி சார்பாக விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாட நேர்ந்தால் அவர் சோர்வடையவும் காயத்தில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
மேலும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். இதற்குப் பிறகு இங்கிலாந்து தொடருக்காகவும் அவர் மற்றொரு பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்க வேண்டிய சூழல் உருவாகும்.
இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியிலிருந்து நடராஜனை விடுவிக்குமாறு பிசிசிஐ கோரிக்கை விடுத்தது.
தொடர்ந்து தமிழக ஒருநாள் அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று நடராஜன் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.