பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
பதற்றத்தை ராஜதந்திர வழிகளில் தணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்' இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத நாடுகளுக்கு இடையே அமைதி அவசியம்
நவாஸ் ஷெரீப் தனது ஆலோசனையில், அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு அணுகுமுறையை அவர் விரும்பவில்லை. மாறாக, 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கார்கில் போரை எதிர்த்ததால் 1999-இல் தனது அரசாங்கம் கலைக்கப்பட்டது என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். "1993 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் எனது அரசாங்கங்கள் ஏன் கவிழ்க்கப்பட்டன என்பதை அறிய விரும்புகிறேன். கார்கில் போரை எதிர்த்ததால்தான் இது நடந்ததா?" என்று நவாஸ் ஷெரீப் கேள்வி எழுப்பியுள்ளார்.
லாகூர் பிரகடனம் மீறல் - நவாஸ் ஷெரீப் ஒப்புதல்
கடந்த ஆண்டு, 1999-ஆம் ஆண்டு இந்தியாவோடு ஏற்படுத்தப்பட்ட லாகூர் பிரகடன ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதை நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.
"1998 மே 28-ஆம் தேதி பாகிஸ்தான் ஐந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, மரியாதைக்குரிய வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம்... அது எங்கள் தவறு" என்று அவர் கூறினார்.
லாகூர் பிரகடனம் மற்றும் கார்கில் போர்
ஷெரீப் குறிப்பிட்ட ஒப்பந்தம் "லாகூர் பிரகடனம்" ஆகும். இது பிப்ரவரி 21, 1999 அன்று அவராலும் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயாலும் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதாகும். இருப்பினும், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சிறிது காலத்திலேயே, பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் மாவட்டத்தில் ஊடுருவியது. இது கார்கில் போருக்கு வழிவகுத்தது குறிப்பிட்டத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |