பதவியேற்ற மறுநாளே முன்னாள் பிரதமர் கைது - அதிரடி காட்டும் பாலன் ஷா
நேபாள பிரதமராக பாலேன் ஷா பதவியேற்ற மறுநாளே முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமராக பதவியேற்ற பாலேன் ஷா
கடந்த ஆண்டு நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்து Gen-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்து நேபாளபிரதமராக பதவி வகித்து வந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.
இதனையடுத்து இடைக்கால அரசு நாட்டை நிர்வாகம் செய்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நேபாள நாடாளுமன்ற தேர்தலில் RSB கட்சி பாரிய வெற்றி பெற்றது.

அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளரான பாலேன் ஷா(Balen Shah) நேற்று நேபாள பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இன்று காலையில் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(kp sharma oli) கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக்கும்(ramesh lekhak)கைது செய்யப்பட்டுள்ளார்.

Gen-Z இளைஞர்கள் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியதாகவும், உயிரிழப்புகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை, நீதியின் தொடக்கம். இதன் மூலம் நாடு ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்கும் என்று நான் நம்புகிறேன்" என தற்போதைய நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை, இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |