நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு: சுமார் 1500 பேர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை
நேபாள - திபெத் எல்லையில் போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த திடீர் பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது என்று நேபாள காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 66 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 4.50 காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள்
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி கிட்டத்தட்ட 100 சீனர்கள் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் சுற்றுலா வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட 644 சர்வதேச பயணிகள் இதுவரை என்ன ஆனார்கள் என்பது தெரியவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் 178 பேர், நேபாளத்தினர் 127, அமெரிக்கர்கள் 65, மலேசியர்கள் 53, உக்ரைனியர்கள் 51, அவுஸ்திரேலியர்கள் 35, பிரித்தானியர்கள் 33 பேர் காணாமல் போயுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |