நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியச் சிறுமி உட்பட 400 வெளிநாட்டவர்கள் மாயம்
Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8:30 மணியளவில், போட்டே கோஷி ஆற்றின் திபெத்தியப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயாமானதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களில் 33 பிரித்தானியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை, ஆல்பைன் ஈகோ ட்ரெக் என்ற சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், காணாமல் போன பிரித்தானியர்களில் 13 வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஐரிஷ் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்தது.
மேலும், பயணப் பதிவுகளின்படி, காணாமல் போன பிரித்தானியக் குடிமக்களில் 65, 64 மற்றும் 52 வயதுடைய மூன்று ஆண்களும்; 44, 47, 51, 60, 63, 63 மற்றும் 65 வயதுடைய ஏழு பெண்களும் அடங்குவர்.
நேபாளத்தில் வழிகாட்டியுடனான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களை ஏற்பாடு செய்யும் அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் நேபாளத்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா வழிகாட்டிகளும் (38, 35, 45 மற்றும் 29 வயதுடையவர்கள்) காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்தியது.
மட்டுமின்றி, கைலாஷ் மலைக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருந்த அவர்கள், நேபாளத்திலிருந்து திபெத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எல்லையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காணாமல் போனவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் எந்த நாட்டினர் என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் திபெத் இடையிலான இமயமலை எல்லையில் மண் மற்றும் பாறைகளால் ஆன சுவர் ஒன்று ஆற்றில் சரிந்து விழுந்ததாகவும், இதனால் நேபாளப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன; அதேவேளையில், எல்லைப் பகுதி நிலவழிப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜிரோங் (Gyirong) மாவட்டத்தில் சிலர் காணாமல் போனதையடுத்து, திபெத் அதிகாரிகள் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நிலநடுக்கம் ஒன்று பனிச்சரிவைத் தூண்டிவிட்டு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, நீர்மின் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எட்டு தென் கொரியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் போட்டே கோஷி, திரிசூலி ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், தேவைப்பட்டால் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பார்வையாளர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள பிரித்தானிய தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உள்ளூர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது.
அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில்,
ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |