மருத்துவமனைகளில் இடமில்லை... குவியும் சடலங்கள்: ஸ்தம்பித்துப்போன குட்டி நாடு
கொரோனாவால் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக நேபாள நாட்டின் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
நேபாளத்தில் மருத்துவமனைகள் மொத்தமும் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை பீதியை ஏற்படுத்தி வருகிறது. அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டுள்ள அதே மோசமான நிலையை நேபாளமும் எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நேபாளத்தில் 8,287 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு முன்னர் இதே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 337 என இருந்துள்ளது.
மட்டுமின்றி சிகிச்சை பலனின்றி மரணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 53 என பதிவாகியுள்ளது. கடந்த மாதம் இது ஒரே ஒரு இறப்பாக பாதிவாகியிருந்தது.
நேபாளத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்புடன் உள்ளதாகவும், பாதிப்பு அறிகுறி இல்லை என்பதால் பலர் அடையாளம் காணப்படாமல் உள்ளனர் எனவும், இதனால் மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று தொடர்ந்து நாடு முழுவதும் பரவினால் கொத்து கொத்தாக மரணங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
முக்கிய நகரங்களில் கடந்த மாதம் முதல் ஊரடங்கு நடவடிக்கை விதிக்கப்பட்டது, இந்த வாரம் நேபாளம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை தடை செய்துள்ளது.
சுமார் 31 மில்லியன் குடிமக்கள் கொண்ட நேபாளத்தில் அவசர சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை 1,595 மட்டுமே. இந்த நிலையில் சீனா நன்கொடையாக அளித்த 800,000 டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா நன்கொடையாக 1 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அளிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அதை ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.