கும்ப மேளாவில் கலந்துகொண்ட வெளிநாட்டு மன்னர் மற்றும் இராணிக்கு கொரோனா உறுதி!
கோடிக்கணக்கான யாத்ரீகர்கள் கலந்து கொண்ட இந்திய மத விழாவில் கலந்துகொண்டு நாடு திரும்பிய நேபாளத்தின் முன்னாள் மன்னரும் ராணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர பிர் பிக்ரம் ஷா (73) மற்றும் அவரது ராணி கோமல் ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா (70) ஆகியோர் கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் தங்கியிருந்தனர். அவர்கள் கும்பமேளாவைக் கொண்டாடுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் காத்மாண்டு திரும்பினர்.
இந்நிலையில், இருவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மன்னரின் செய்தித் தொடர்பாளர் பானி ராஜ் பதக் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது நிர்மல் நிவாஸில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக ராஜ பகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரந்துள்ளநிலையிலும், இந்த முறை கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கை நதியில் நீராட 2.5 கோடி மக்கள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக திருவிழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தின் கடைசி மன்னரான ஷா, 2001-ஆம் ஆண்டில் அவரது மூத்த சகோதரர் பிரேந்திர பிர் பிக்ரம் ஷாவும் அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
ஆனால், நேபாளத்தின் 240 ஆண்டுகால இந்து முடியாட்சியை ஒழிக்க நாடாளுமன்றம் வாக்களித்த பின்னர், 2008-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் அரியணையில் இருந்து விலகி, நாட்டை மதச்சார்பற்ற குடியரசாக மாற்றினார்.