இரகசிய பங்கரில் பதுங்கிய நெதன்யாகு... ஈரான் தொடர்பில் 48 மணி நேரக் கெடு விதிப்பு
டெல் அவிவ் ரகசிய பங்கரில் பதுங்கியுள்ள நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதியின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முறியடிக்கும் நோக்கில் இஸ்ரேலியத் தளபதிகளுக்கு 48 மணி நேரக் காலக்கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
48 மணி நேரக் கெடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழியப்பட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தை ஆய்வு செய்த பிறகு, ஈரானின் ஆயுதத் தொழில்துறை மட்டுமின்றி, முடிந்தவரை அதிகமான உயர் மதிப்புமிக்க ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலியத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈரானை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த 15 அம்ச திட்டம் போதுமான அளவு வலுவாக இல்லை என்றே இஸ்ரேலியப் பிரதமரும் அவரது உயர்மட்ட இராணுவ ஆலோசகர்களும் கவலையடைந்துள்ளனர்.
மேலும், ஈரான் போரில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுவரும் அமெரிக்கா எந்த நோடியும் ஒரு ஒப்பந்தத்தை எட்டலாம் என்ற நிலையிலேயே நெதன்யாகு தமது தளபதிகளுக்கு 48 மணி நேரக் கெடு விதித்துள்ளார்.
நெதன்யாகு முன்னிலையில் நடந்த அந்த ரகசிய கூட்டம் கடும் அழுத்தத்தின் மத்தியில் நடந்ததாகவே இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், டொனால்ட் ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்தை ஈரான் நிர்வாகம் புறந்தள்ளியுள்ளது. ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ள ஒரு வார போர் நிறுத்தம் என்பதும், அமைதிப் பேச்சுவார்த்தை என்பதும் வெறும் நாடகம் என்றே ஈரான் விமர்சித்துள்ளது.
நெதன்யாகு தரப்பில் மூன்று இலக்குகளை முன்வைத்துள்ளனர். ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை இருப்பை அகற்றுவது, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்வது, மற்றும் ஈரானுக்குள் பொதுமக்கள் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்துவதற்கான சூழலை உருவாக்குவது.

இந்த மூன்று குறிக்கோள்களையும் அடையாவிட்டால், போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றே நெதன்யாகுவின் கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பென்டகன் தலைவர்கள்
ஈரானின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டும், அங்குள்ள ஆட்சியை கவிழ்க்க முடியாமல் போனதை அடுத்து அமெரிக்கா தற்போது, ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற இலக்கில் இருந்து ஒதுங்கியுள்ளது.
இருப்பினும், ஒரு வார காலம் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு, ஈரானுக்குள் இராணுவத்தை அனுப்பும் திட்டத்தை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். அப்படி ஒரு சூழல் உருவாக வேண்டும் என்றே ஈரானும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மத்திய கிழக்கு நோக்கி ஏற்கனவே புறப்பட்டுள்ள சுமார் 4,500 கடற்படை வீரர்களுடன் இணைவதற்காக, 82-வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த சுமார் 2,000 வான்குடைப் படைவீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்புமாறு பென்டகன் தலைவர்கள் நேற்று இரவு உத்தரவிட்டனர்.
இது ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் வெறும் நாடகம் என்பதை உறுதி செய்துள்ளது. ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தை நிராகரித்துள்ள ஈரான் வளைகுடாப் பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் மூடவும், இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் கோரியுள்ளது.

மட்டுமின்றி, இனி ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு என ஈரானுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் ஈரானின் கோரிக்கைகள் அபத்தமானவை மற்றும் யதார்த்தமற்றவை என ட்ரம்ப் அதிகாரி ஒருவர் கொந்தளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |