லட்சக்கணக்கான மக்களை..காஸாவைப் போல் நாடொன்றில் நடவடிக்கை - அறிவித்த நெதன்யாகு
தெற்கு லெபனானில் தங்களது இராணுவம் படையெடுப்பை விரிவுபடுத்தும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
1,200 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலின் தாக்குதலால் லெபனான் நாட்டில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அந்நாட்டின் தெற்கில் ஏற்பட்ட பேரழிவின் அளவையும், அப்பகுதியில் நிறுவப்பட்டு வரும் இஸ்ரேலிய இராணுவத் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
சமீபத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரான காட்ஸ், தெற்கு லெபனானில் தனது நாடு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவி, முக்கிய ஆற்றுப் பாதைகளைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் என்று கூறினார். இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான மக்களை காலவரையின்றி இடம்பெயரச் செய்யும்.

இதனைக் கண்டித்து "காஸாவில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகள் லெபனானில் நடக்கக் கூடாது" எனவும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஹிஸ்புல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
தெற்கு லெபனான் மீதான படையெடுப்பு
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு லெபனான் மீதான படையெடுப்பை தங்கள் இராணுவம் விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் தனது தரைவழித் தாக்குதலை அங்கு விரிவுபடுத்தும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
காஸாவில் பல ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் இராணுவத் தாக்குதலைப் போலவே, தெற்கு லெபனான் மீதான தனது படையெடுப்பையும் வடிவமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என்ற அச்சத்தை நெதன்யாகுவின் அறிவிப்பு தீவிரப்படுத்தக்கூடும்.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்து, தெற்கு லெபனான் மீது நெதன்யாகுவின் இராணுவம் படையெடுப்பை நடத்தி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |