நெதர்லாந்து விமான நிலையத்தில் பரபரப்பு... 2 விமானங்களில் பலருக்கு தொற்று உறுதி
தென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகளில் 60கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கிய இரண்டு விமானங்களில் மொத்தம் 61 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றானது எந்த மாறுபாடு என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தற்போது பயணிகள் அனைவரையும் Schiphol விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 600 பயணிகளில், அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தியதில் 61 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பயணிகளில் Omicron மாறுபாடு தொடர்பிலும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக நெதர்லாந்து நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. Omicron மாறுபாடு தொடர்பில் நவம்பர் 24ம் திகதி உலக சுகாதார அமைப்புக்கு முதன்முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த சில மணிநேரங்களில் உலகின் பல நாடுகள் தென்னாபிரிக்கப் பகுதியிலிருந்து விமானப் பயணங்களுக்குத் தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக நெதர்லாந்தும் மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Omicron மாறுபாடு தொடர்பில் ஏற்கனவே கவனத்தில் கொண்டிருந்த நெதர்லாந்து நிர்வாகம், குறித்த விமானப் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா சோதனை முன்னெடுக்க ஏற்பாடு செய்தது.
இதனால் பயணிகள் உரிய நேரத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகினர். பலரும் 4 மணி நேரம் வரையில் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடும் பரபரப்பு காணப்பட்டது என்றே கூறப்படுகிறது.