ஆப்கானிஸ்தான் அகதிகள் வருகைக்கு எதிராக பிரபல ஐரோப்பிய நாட்டில் மக்கள் போராட்டம்
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானிலிருந்து முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நெதர்லாந்து வந்தடைந்தனர்.
நெதர்லாந்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களுக்கான நான்கு அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, அதில் Harskamp-ல் உள்ள இராணுவ முகாமும் ஒன்று.
ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 800 பேர் Harskamp இராணுவ முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அகதிகள் வருகைக்கு எதிராக Utrecht-க்கு கிழக்கே உள்ள கிராமமான Harskamp-ல் உள்ள இராணுவ முகாமில் வரவேற்பு மையத்திற்கு வெளியே சுமார் 250 போராட்டகாரர்கள் திரண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த போராட்டம் முதலில் அமைதியாக இருந்தது, ஆனால் கலைந்து செல்லுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளை இளைஞர்கள் பலர் புறக்கணித்ததால் பதற்றம் அதிகரித்தது.
சில போராட்டகாரர்கள் தேசியவாத பாடல்களைப் பாடினர், எதிர்ப்பு பதாகைகளைக் காட்டி வரவேற்பு மையத்தின் முன் டயர்களை கொளுத்தினர்.
சம்பவயிடத்திற்கு நாய்களுடன் விரைந்த பொலிஸ் அதிகாரிகள், போராட்டதை கலைத்து போராட்டக்காரர்களை அப்பகுதியை விட்டு விரட்டி அனுப்பினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.