மூக்கு வழியாக ஸ்பிரே அடிக்கும் புதிய கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
சீனாவில் மூக்கு வழியாக உள்ளிழுக்கும் புதிய ஸ்பிரே வகை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பு மருந்துகளின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்திலிருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில், சீனா நாசி துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய திரவநிலை தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. வலி நிவாரண ஸ்பிரேபோல இதனை நாசி துவாரத்தில் அனைவரும் அடித்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இந்த திரவ தடுப்பு மருந்தை சுவாசிப்பதன் மூலமாக அது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை நுரையீரலில் குறைக்கிறது. கிட்டத்தட்ட 9 கோடி தடுப்பு மருந்துகள் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பு மருந்து ஸ்பிரே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) மற்றும் CanSino Biologics நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்த இராணுவ அறிவியல் அகாடமியின் கீழ் இராணுவ மருத்துவ நிறுவனம் இணைந்து இந்த ஸ்பிரே வகை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டில் பரிசோதிக்கப்படும் இரண்டாவது ஸ்பிரே வகை தடுப்பு மருந்தாகும்.
இந்த திரவநிலை தடுப்பு மருந்து இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. இது உண்மையாகவே பலன் அளிக்குமானால் இதனை பொது மக்களுக்கு அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.