ஞாயிற்றுக்கிழமை முதல் ஜேர்மனிக்குள் நுழையும் அனைவருக்கும் புதிய விதிமுறைகள் அறிவிப்பு
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஜேர்மனிக்குள் விமானம் மூலமாக நுழையும் அனைவருக்கும் புதிதாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
இதற்கு முன் அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மட்டுமே, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டுமென்ற விதி இருந்தது.
ஜேர்மன் சுகாதாரத்துறை, வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) நள்ளிரவு 12 மணியிலிருந்து, ஜேர்மனிக்குள் விமானம் வாயிலாக நுழையும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என நேற்று அறிவித்தது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதிகளின்படி, பயணிகள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும்.
கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் வைத்திருப்போர் மட்டுமே விமானம் ஏற அனுமதிக்கப்படுவார்கள்..
கொரோனா பரிசோதனைக்கு, பயணிகள் தாங்களே கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். பி சி ஆர் மற்றும் ஒப்புதலளிக்கப்பட்டுள்ள அதிவேக பரிசோதனை முடிவுகளுக்கு மட்டுமே அனுமதி. விமான பணியாளர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கொரோனா பரிசோதனையில் யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.
இந்த விதிமுறைகள் மே மாதத்தின் நடுப்பகுதி வரை அமுலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.