பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை
new york mayor mamdani ban school students using ai: உலகம் முழுவதும் AI கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நியூயார்க் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை AI பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் AI பயன்பாடு
உலகம் முழுவதும் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை வழங்குவதோடு, மாணவர்களுக்கு வீட்டு பாடத்தில் உதவுவது தொடங்கி, ஐடி ஊழியர்களுக்கு கோடிங் எழுதுவது வரை பல்வேறு பணிகளை AI செய்கிறது.

தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் AI பாடம் கற்றுத் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
நியூயார்க் பள்ளிகளில் AI பயன்பாட்டிற்கு தடை
அதேவேளையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு AI பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக நியூயார்க் நகர மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.
மொத்த மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கான, சுமார் 6,00,000 அரசுப் பள்ளி மாணவர்களை இது பாதிக்கும்.

ஆசிரியர்கள், பாடத் திட்டமிடல் மற்றும் பிற செயல்பாட்டுப் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தடை ஒரு ஆண்டுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதே போல் மாணவர்களின் திரைநேரத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 30 நிமிடங்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களும் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
இதில் மாற்றுத்திறனாளி மற்றும் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
AI தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தானி, “ஆரம்பக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அது அவசியமானது என்றும் தொழில்நுட்பத் துறை நம்மை நம்ப வைக்க விரும்புகிறது. நாங்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை.
குழந்தைகள் கற்று வளர்வதற்கு ஆசிரியர்களும் மனிதத் தொடர்பும் தேவை. அவர்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கல்வியாளர்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்பவும், கடினமான பிரச்சனைகளைத் தாங்களாகவே சமாளிக்கவும் வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |