12 முதல் 15 வயது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி! எந்த நாட்டில் தெரியுமா?
நியூசிலாந்தின் மருந்துக் கட்டுப்பாடு ஆணையம், 12 முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் போட இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.
இதனை அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) அறிவித்தார்.
முன்னதாக 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே Pfizer/BioNTech தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஃபைசர் சோதனைகள் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 100 சதவீத செயல்திறனைக் காட்டின.
அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்தின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பாதுகாப்பு ஆணையமான Medsafe, இந்த ஆயிவில் கிடைக்கப்பெற்ற அறிவியல் மற்றும் மருத்துவத் தரவுகளைப் பரிசீலித்த பிறகு, தடுப்பூசிக்கான இடைக்கால அனுமதி வழங்கப்பட்டதாக ஆர்டன் கூறினார்.
மேலும், நியூசிலந்தில் 12 முதல் 15 வயது வரையிலான சுமார் 265,000 குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், எல்லோருக்கும் தேவைப்படும் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பதாக கூறினார்.
இருப்பினும், Medsafe-ன் முடிவைக்கொண்டு சுகாதார அமைச்சகம் கூறிய ஆலோசனையை இந்த மாத இறுதியில் அரசாங்கம் மதிப்பாய்வு செய்து ஒரு முடிவை எடுக்கும் என்று ஆர்டன் கூறினார். அந்த முடிவு எடுக்கும் வரை, 265,000 குழந்தைகளில் எவருக்கும் தடுப்பூசி வழங்கப்படாது என்றும் கூறினார்.
நியூசிலாந்தின் மக்கள்தொகையான 5 மில்லியனில் இதுவரை சுமார் 1 மில்லியன் பேருக்கு Pfizer தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் ஃபைசர்-பயோஎன்டேக் (Pfizer/BioNTech) தவிர வேறெந்தத் தடுப்புமருந்திற்கும் நாட்டின் மருத்துவ அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.