இந்தியா அரையிறுதிக்கு வருவதை மேலும் கடினமாக்கிய நியூசிலாந்து! நமீபியாவுக்கு எதிராக 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டி20 உலக கோப்பையில் நமீபியாவை எதிர்கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி, 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, க்ரூப் 2 புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணிக்கு அரையிறுதி முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நியூசிலாந்து அணி, வெற்றி பெர்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்துடன் நமீபியா அணியை எதிர்கொண்டு ஆடியது.
ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் நியூசிலாந்து அணி துடுப்பாட தொடங்கியது.
அனுபவமற்ற சிறிய அணியாக பார்க்கப்பட்டாலும், நமீபியாவின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாடுடன் பந்துவீசினர். அதிரடி துடுப்பாட்டாக்காரர்களான மார்டின் கப்டில், டேரைல் மிட்செல் ஆகிய வீரர்களுக்கு அவ்வளவு எளிதாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இராமப்பட்டே எண்ணிக்கையை கூட்டவேண்டியாதாக இருந்தது.
கப்டில் 18 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேரைல் மிட்செலும் 15 பந்தில் 19 ஓட்டங்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஒரு கூட்டணி தேவைப்பட்ட நிலையில், டெவான் கான்வேவுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்கள் சேர்த்தனர்.
டெவான் கான்வே 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேற, கேப்டன் வில்லியம்சனும் 25 பபந்துகளில் 28 ஓட்டங்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 16 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்தது.
16 ஓவர்கள் வரை ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நமீபியா அணி, கடைசி 4 ஓவரில் கோட்டைவிட்டது. ஏனெனில் கடைசி 4 ஓவர்களில் க்ளென் ஃபிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் இணைந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி அணியின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினர்.
க்ளென் ஃபிலிப்ஸ் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களையும், நீஷம் 23 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்களை விளாச, கடைசி 4 ஓவரில் நியூசிலாந்து அணி 67 ஓட்டங்களை குவித்தது.
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 163 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து 164 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நமீபியா அணி வீரர்கள் பவர்ப்ளேயில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடினர். ஆனால் பவர்ப்ளே முடிந்து 8-வது ஓவரில் வான் லிங்கன் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீஃபன் பார்டும் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் மிட்செல் சாண்ட்னெரும், இஷ் சோதியும் இணைந்து அருமையாக வீசி எண்ணிக்கையை கட்டுப்படுத்தினர்.
இதனால் நெருக்கடி அதிகரித்ததையடுத்து, க்ரீன் (23), வீஸ் (16), ஜான் நிகோல் (0), க்ரைக் வில்லியம்ஸ் (0) ஆகிய அனைவருமே அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 20 ஓவரில் 111 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன், நல்ல ரன்ரேட்டையும் பெற்றுள்ளது.
இந்த அபார வெற்றியின் மூலம், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை மேலும் கடினமாக்கியுள்ளது நியூசிலாந்து.
தற்போது, ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அதிக ரன்ரேட்டுன் வெற்றி பெர்றே ஆகவேண்டும் எனற கட்டாயத்தில் இந்தியா விளையாடிவருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) 7 மணியளவில் தொடங்கிய இப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபற்றுவருகிறது.