சூட்கேஸில் அழுகி கிடந்த குழந்தைகளின் எச்சங்கள்: யார் என அடையாளம் கண்டுபிடிப்பு
நியூசிலாந்தில் சூட்கேஸில் இறந்த குழந்தைகளை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகளின் உறவினர் ஒருவரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் ஏலத்தில் வாங்கிய பெட்டிக்குள், இறந்து பல ஆண்டுகளாக அழுகிக்கிடந்த குழந்தைகளின் எச்சங்களை சோதனை செய்ததில், அவர்கள் யார் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்லாந்திற்கு அருகே கைவிடப்பட்ட பொருட்களுக்கான ஏலத்தில், டிரெய்லர் நிறைய இருந்த பொருட்ககளுடன் சூட்கேஸ் ஒன்று இருந்தது. அதனை விலைகொடுத்து வாங்கிய குடும்பம், அதனை திறந்து பார்த்தபோது மணித் எச்சங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சடலங்கள் மீட்கப்பட்டதிலிருந்து நாட்டையே உலுக்கிய மரணங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூட்கேஸ்களை வாங்கிய குடும்பத்துக்கும் மரணத்துக்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எச்சங்களை சோதனை செய்ததில், சமீபத்தில் அவை பத்து வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆக்லாந்து அதிகாரிகள் சூட்கேஸ்களுக்குள் அடைக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் அடையாளங்களை கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களின் குடும்பங்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படாது என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, குழந்தைகள் இறக்கும் போது ஆரம்ப பள்ளி வயதுடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
குழந்தைகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய எந்த ஆதாரத்தையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென் கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள பொலிஸார் குழந்தைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அவர் 2018-ல் தென் கொரியாவுக்கு வந்ததாகவும், அவர் அதற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறியதற்கான பதிவு எதுவும் இல்லை என்று சியோல் பொலிஸார் தெரிவித்தனர்.