எங்கள் திட்டம் இது தான்! இந்தியாவை டெஸ்ட்டில் வீழ்த்த பக்கா பிளான் வைத்திருக்கும் நியூசிலாந்து பயிற்சியாளர்
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தங்களுடைய வியூகங்கள் என்ன என்பதை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் திகதி கான்பூரில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான Gary Stead, இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் போது ஏன் வெற்றி பெறாமல் போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அது தான் வெளிப்படையான சவாலின் மகத்துவம்.
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவோம். ஆனால், இந்தியாவில் அப்படி இறங்க முடியாது. நாம் விளையாடும் விதத்தை மாற்ற வேண்டும்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வந்த அவுஸ்திரேலியா அணி, சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. அதே போன்ற சவாலான சூழ்நிலைகளை தான் நாங்கள் எதிர்கொள்ளவுள்ளோம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், நாங்கள் விளையாட போகும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
கான்பூரில் கருப்பு களிமண் இருக்கும், மும்பை வான்கடே மைதானத்தில் சிவப்பு மண், நாம் சில விஷயங்களை செய்தாலே போதும் என்று கூறியுள்ளார்.